கூகுள் நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு ரூ.5 கோடி வழங்கிய சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு ரூ.5 கோடி வழங்கிய சுந்தர் பிச்சை
Updated on
1 min read

ஆல்பாபெட் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவனம் சார்பாக இந்தியாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு கடந்த மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கை அமல்படுத்தியது. மூன்று வாரங்களாகத் தொடரும் இந்த ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான தினக்கூலிகள் வறுமையில் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடுத்தர வணிகத்தினர், தொழிலாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் கூகுள் நிறுவனம் சார்பாக சுமார் 5 கோடி ரூபாயை தன்னார்வ அமைப்பான கிவ் இந்தியாவுக்கு (Give India) அவர் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கிவ் இந்தியா தனது ட்விட்டர் பக்கதில், ''மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ள தினக் கூலிகளுக்கு உதவிய கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக வறுமையில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ, இந்தியா முழுவதிலிருந்து இதுவரை சுமார் 12 கோடிக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது கிவ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு இந்தியா முழுவதும் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 308 பேர் பலியாகியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in