

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து அமெரிக்காவில் செயல்படும் ஜான் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 1,02,753 பேர் பலியாகியுள்ளனர். 16 லட்சத்து 98 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் 5,01,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 1,58,273 பேரும், இத்தாலியில் 1,47,577 பேரும், பிரான்ஸில் 1,25,931 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இத்தாலியில் அதிகபட்சமாக 18,769 பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் கரோனா தொற்று முழுமையாக நீங்கும்வரை உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.