இத்தாலியில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு?

இத்தாலியில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு?
Updated on
1 min read

இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து இத்தாலியின் முக்கியச் செய்தி நிறுவனங்கள் தரப்பில், ''இத்தாலியில் பிரதமர் ஜிசப்பே கான்டே சாலையோரங்களில் மக்கள் உடற்பயிற்சி செய்வதைத் தடைசெய்ய உள்ளார். மேலும், இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்'' என்று தெரிவித்துள்ளன.

மேலும். ஊரடங்கு முடிவு குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் தலைவர்களுடன் இத்தாலி பிரதமர் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு மாதமாக கரோனா வைரஸுக்கு உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலியில் உயிரிழப்பு குறைவு, பாதிப்பு குறைவு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in