Last Updated : 09 Apr, 2020 09:34 AM

 

Published : 09 Apr 2020 09:34 AM
Last Updated : 09 Apr 2020 09:34 AM

அதிகமான சவப்பெட்டிகளை சுமக்க விரும்பவில்லையென்றால், தயவு செய்து கரோனாவில் அரசியல் செய்யாதீர்கள்: ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் : கோப்புப்படம்

ஜெனிவா


அதிகமான சவப்பெட்டிகளை சுமக்க விரும்பவில்லையென்றால், தயவு செய்து கரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள், உலக நாடுகளிடைேயே ஒற்றுமை இருந்தால்தான் கரோனா வைரஸை வீழ்த்தமுடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் அதிபர் ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கரோனா வைரஸால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள், 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்னர். இதனால் அதிபர் ட்ரம்புக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸை எப்படியாவது கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறார்.

ஆனால், சீனா கரோனா வைரஸிலருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதைப் பார்த்த அதிபர் ட்ரம்ப் தனது கோபத்தை உலக சுகாதார அமைப்பின் மீது திருப்பினார்.

கரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை அறிவிப்புகளை உலக சுகாதாரஅமைப்பு தெரிவிக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு நடப்பதால், இனிமேல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போகிறோம் என்று அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் மிகத்தீவிரமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதைத் தடுக்க உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் மிகவும் அவசியம். சீனாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த ஆபத்தான எதிரியை தோற்கடிக்க வேண்டும்

நான் உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் மக்களைக் காப்பாற்ற வேண்டும், தயவு செய்து கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.

நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால் , கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். இது நெருப்புடன் விளையாடும் விளையாட்டு. உயிர் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

என் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் நான் இந்த பணியை கைவிடமாட்டேன். ஒரு நீக்ரோ, கறுப்பினத்தவர் என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன். என்னை நீக்ரோ, கறுப்பினத்தவர் என்று சிலர் விமர்சிப்பதை நான் கருத்தில்கொள்ளமாட்டேன்.

உலகில் உள்ள கறுப்பின சமூகத்தினர் அவமதிக்கப்படும் போது, ஆப்பிரிக்க மக்கள் அவமதிக்கப்படும் போது நான் தாங்கிக் கொள்ளமாட்டேன். ஆப்பிரிக்க மக்கள் மீதும், மண்ணின் மீதும் ஒருபோதும் தடுப்பூசிகளை சோதனை செய்வதை அனுமதி்க்கமாட்டேன்.

கரோனா வைரஸைத் தோற்கடிக்க ஒற்றுமை மட்டுமே ஒரே வழி. இந்த உலகிற்கு இரு வழிகளை நான் பரிந்துரைக்கிறேன். முதலில் தேசிய ஒற்றுமை, 2-வது உலகளாவிய ஒருமைப்பாடு. ஒரு நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து நாட்டின் நலனுக்காக, மக்களுக்காக ஒன்று ேசருங்கள். மக்களுக்காக அரசியல் செய்யாமல், அரசியல், கொள்கைகளைக் கடந்து பணியாற்றுங்கள்.

ஒற்றுமை மட்டும் இல்லவிட்டால், எந்த நாடும், எவ்வளவு சிறப்பான வசதிகள் இருந்தாலும் கரோனாவை ஒழிக்க முடியாது, அது மேலும் சிரமத்தைக் கொடுக்கும்.

கரோனா வைரஸை வைத்து அரசியல் ஆதாயம் அடையாதீர்கள், அரசியல் ஆதாயம் அடைவதற்கும், உங்களை நிரூபிப்பதற்கும் ஏராளமான வழிகள் இருக்கின்றன

இவ்வாறு டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவி்த்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x