Last Updated : 09 Apr, 2020 06:47 AM

 

Published : 09 Apr 2020 06:47 AM
Last Updated : 09 Apr 2020 06:47 AM

மோடிக்கும், இந்தியாவுக்கும் நன்றி: நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்; அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி

பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷிங்டன்

கரோனா வைரஸ் நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தாக பயன்படும் மலேரியா தடுப்பு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு அனுமதித்த பிரதமர் மோடிக்கும், இந்தியாவும் நன்றி, உதவியை என்றும் மறக்கமாட்டோம் என்று அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்தது.

ஆனால், கரோனா வைரஸால் 4 லட்சம் மக்களுக்கு மேல் பாதிப்பையும், 12 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பையும் சந்தித்த அமெரிக்கா அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது.

மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இதனால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி ட்ரம்ப் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கவில்லை.

இதனால் ட்ரம்ப், “ இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கான ஏற்றுமதித் தடையை விலக்காதது வியப்பளிக்கிறது. எதிர்காலத்தில் பதிலடி கொடுப்போம்” என மிரட்டும் விதத்தில் தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில், மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசும் அறிவித்தது.

இதையடுத்து சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப் “லட்சக்கணக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை நாங்கள் வாங்கியிருக்கிறோம். 2.90 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அமெரிக்காவுக்கு வருகின்றன. நீங்கள் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்தால் பெரிய மனிதர் என்றேன். உண்மையில் மோடி பெரிய மனிதர்தான்.” என்று தெரிவித்தார்

இந்நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்ததைத் தொடர்ந்து நன்றி தெரிவித்து அதிபர் ட்ரம்ப் ட்விட் செய்துள்ளார். அதில் “ அசாதாரண சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான கூட்டுறவு, ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.

இந்த உதவியை அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான தலைமைக்கும் நன்றி. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனிதநேயத்துடன் செயல்பட்டதற்கு இந்தியப் பிரதமருக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

உலகளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளுரோகுயின் மாத்திரைகளை இந்தியாதான் தயாரித்து வழங்கி வருகிறது. 200எம்ஜி, 400 எம்ஜி அளவுகளில் மாதத்துக்கு 40 டன் மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. குஜராத்தில் உள்ள முக்கியமான 4 மருந்து நிறுவனங்கள் இதை பெரும்பான்மையாக தயாரிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x