Published : 08 Apr 2020 07:27 PM
Last Updated : 08 Apr 2020 07:27 PM

பிரிட்டன் பிரதமர் உடல் நிலையில் தொடர்ந்து சீரான முன்னேற்றம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை இரண்டாவது நாளாக சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டாவது நாளாக போரிஸ் ஜான்சனின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “இரண்டாவது இரவாக போரிஸ் ஜான்சன் உடல் நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்” என்றார்.

யுகேவில் கரோனோ வைரஸுக்கு 55,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x