Published : 08 Apr 2020 06:49 PM
Last Updated : 08 Apr 2020 06:49 PM

அனுமன் போல் உதவியுள்ளீர்கள்: ராமாயணத்தையும், சஞ்சீவி மூலிகையையும் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் ஜேர் எம்.போல்சோனாரோ

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மலேரியா மாத்திரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி அனுமதிக்கு நன்றி தெரிவித்து, ராமாயணத்தையும், ஆஞ்சநேயரையும் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜேர் எம்.போல்சோனாரோ கடிதம் எழுதியுள்ளார்.

மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்தது.

ஆனால் இலங்கை, பிரேசில், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள் தங்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளைத் தந்து உதவ ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியிடம் பேசி மாத்திரைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார்.

இதையடுத்து மனிதநேய அடிப்படையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாராசிட்டமால் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கிக்கொண்டது.

இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு பிரசேசில் அதிபர் ஜேர் எம்.போல்சோனாரோ கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை விலக்கியதை ராமாயாணத்தில் வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸ் நோாயாளிகள் உயிரைக் காக்கும அருமருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இருப்பதால், அதை ராமயாணத்தில் வரும் சஞ்சீவி மூலிகையோடு பிரேசில் அதிபர் ஒப்பிட்டுள்ளார்.

இதில் மிகவும் வியப்பாக அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நாளில் இந்தக் கடிதத்தை பிரேசில் அதிபர் எழுதியுள்ளார்.

அதில், “கடவுள் ராமரின் சகோதரர் லட்சுமணன் மூர்ச்சையாகி போரில் விழுந்தவுடன், கடவுள் அனுமன் இமாலய மலைப்பகுதிக்குச் சென்று அரிய சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனைக் காத்தார். அனுமன் செய்த உதவி போல் செய்துள்ளீர்கள். இறைத்தூதர் ஏசு, நோயுற்றவர்களை குணப்படுத்தி, பார்டிமுக்கு பார்வை வழங்கியதைப் போல் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை விலக்கி உதவியுள்ளீர்கள்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வோம். இருநாட்டு மக்களின் ஆசிகளையும் பகிர்ந்து கொள்வோம். எங்கள் நாட்டுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு மத்திய அரசுத் தரப்பில் அளித்த பதிலில், “இந்தக் கடினமான நேரத்தில் பிரேசிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் என பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள், உதவிகளுக்கு இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x