Published : 08 Apr 2020 01:12 PM
Last Updated : 08 Apr 2020 01:12 PM

பாகிஸ்தானில் 24 மணிநேரத்தில் 577 பேருக்கு கரோனா தொற்று உறுதி: பாதிப்பு 4,072 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் 577 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்று எண்ணிக்கை 4,072 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 577 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,072 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் சுமார் 2,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் 42,159 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா தொற்று இவ்வாறு தொடர்ந்தால் நிலைமை கைமீறிப் போகலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அங்கு பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,096 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x