Published : 06 Apr 2020 03:43 PM
Last Updated : 06 Apr 2020 03:43 PM

ஜப்பானில் பரவும் கரோனா வைரஸ்:  முக்கிய நகரங்களில் நாளை முதல் அவசர நிலை பிரகடனம்

ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நாளை முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை விடவும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளபோதிலும் வேகமாக பரவி வரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இதனால் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை அடைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் வருவதற்கு அந்நாட்டு அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடத்துக்கு ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் 12.6 பில்லியன் டாலர்கள் செலவு செய்திருந்தது.

ஜப்பானில் கரோனா வைரஸுக்கு இதுவரை 3500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் 1000 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அங்கு 83 பேருக்கு காரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டதாவது:
‘‘கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் டோக்கியோ மற்றும் பிற நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. ஒரு மாத காலத்திற்கு இது அமலில் இருக்கும்.

இதன் மூலம் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அத்தியாவசி தேவையை தவிர வேறு எதுவுக்கும் வெளியே வரக் கூடாது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்படும். எனினும் ஒட்டுமொத்தமாக எதுவும் நிறுத்தப்படாது’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x