Last Updated : 05 Apr, 2020 08:55 AM

 

Published : 05 Apr 2020 08:55 AM
Last Updated : 05 Apr 2020 08:55 AM

கரோனா வைரஸ்: எங்களுக்கு உதவுங்கள்: பிரதமர் மோடியிடம் ட்ரம்ப் வேண்டுகோள்

பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷிங்டன்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை தந்து எங்களுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயி்ர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்குப்பின், இந்த மாத்திரைகளை ஏற்றுமதியை மத்தியஅரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.

ஆனால், இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தபோதிலும் வர்த்தக ரீதியாகவே இது செல்லுபடியாகும், மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

கரோனா வைரஸால் அமெரிக்கா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் அங்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மற்ற நாடுகளை நம்பியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:


நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை காலை தொலைப்பேசியில் பேசினேன். இரு நாடுகளும் கரோனா வைரஸை ஒழிப்பதில் ஒற்றுமையுடன் செயல்பட சம்மதித்துள்ளோம்.
கரோனா வைரைஸில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உயிர் காக்கும் மாத்திரையாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இருக்கிறது. இந்த மாத்திரைகளை அமெரிக்க மிக அதிக அளவி்ல இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது.

ஆனால், இந்தியாவில் அந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளதால், அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆதலால், அந்த தடையை எங்களுக்காக தளர்த்தி மாத்திரைகள்கிடைக்க உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தேன். பிரதமர் மோடியும் தீவிரமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்

அமெரிக்காவுக்கு ஆதரவாக உத்தரவுகளைத் தளர்த்தி இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். மலேரியாவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் தான் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் அதிகமாக எடுக்கவேண்டும், ஆனால் கரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்படாதவர்களுக்கு அதுதேவையில்லை
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்

அமெரிக்க மருத்துவர்களும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக்காக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரைகளும் நன்றாகப் பயன் அளிப்பதாக அதிபர் ட்ரம்பும் சமீபத்தில் ஊடகங்கள் மத்தியி்ல் தெரிவித்தார். இதனால்தான் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டுப்பெற அதிபர் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x