கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்: வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதால் பாகிஸ்தானில் மக்கள்-போலீஸ் மோதல்- இமாம் கைது

கராச்சி மசூதி.
கராச்சி மசூதி.
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுதும் எந்த ஒரு வழிபாட்டு நிமித்தமாகவும் தலங்களில் யாரும் கூடக்கூடாது என்று மசூதிகள், கோயில்கள், தேவாலயங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் பாகிஸ்தான் கராச்சியில் ஒரு 3 மணி நேரம்தான் ஊரடங்கை கண்டிப்பாக அமல் படுத்தினர், இந்தக் காலக்கட்டத்தில்தான் மசூதி ஒன்றின் இமாம் ஒருவர் கையில் ஒலிபெருக்கியை வைத்துக் கொண்டு இஸ்லாமியர்களை வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார். போலீஸ் வருவதற்குள்ளாகவே ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் அங்கு குவிந்தனர்.

இவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸ் கூறியதை மக்கள் மதிக்கவில்லை இதனால் பலப்பிரயோகம் தேவைப்பட்டது. இதனையடுத்து மக்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மக்களும் காயமடைந்தனர், போலீஸாரும் காயமடைந்தனர். மசூதி இமாம் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவிலும் உத்தரப் பிரதேசத்தில் மசூதியில் வழிபாடு நடத்த வந்தவர்களை போலீஸார் வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்த போது விஷமிகள் சிலர் வீட்டு மேற்கூரையிலிருந்து போலீஸார் மீது கல்வீசித் தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிலும் மதவழிப்பாட்டுக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் போலீசுக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in