Published : 03 Apr 2020 04:59 PM
Last Updated : 03 Apr 2020 04:59 PM

சிங்கப்பூரில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் வரும் 7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ''அதிகரித்து வரும் தொற்று நோயைத் தடுப்பதற்கு ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு அரங்குகள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மூடப்படும். சந்தைகள், மருந்துக் கடைகள், போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் ஆகியவை தொடர்ந்து திறந்திருக்கும்” என்று லீ செய்ன் லூங் தெரிவித்தார்.

மேலும், மறு உபயோகம் செய்யக் கூடிய முகக் கவசங்களை பொதுமக்களுக்கு அரசு அளிக்கும் என்றும் அவர் தெரித்தார்.

லீ செய்ன் லூங்
லீ செய்ன் லூங்

சிங்கப்பூரில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் அதனைத் தடுப்பதற்காக ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x