Published : 02 Apr 2020 11:24 AM
Last Updated : 02 Apr 2020 11:24 AM

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

இராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாடு கடுமையான விளைவைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “ இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஒருவேளை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தால், ஈரான் அதற்கான மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, இராக்கில் கடந்த மாதம் அமெரிக்க ராணுவமும், ஈரான் ஆதரவு தீவிரவாதிகளும் மோதலில் ஈடுபட்டனர். மார்ச் மாதம் இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மறுநாள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாத முகாம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஈரான் - அமெரிக்கா மோதல்

இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x