Published : 30 Mar 2020 07:17 PM
Last Updated : 30 Mar 2020 07:17 PM

கரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 1,625 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 1,625 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கோவிட் 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,625 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கோவிட் 19 காய்ச்சலுக்கு 18 பேர் பலியாகினர்.

கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தானில் 54 பேருக்கு கோவிட் 19காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கோவிட் காய்ச்சலால் சிந்து மாகாணமும், பஞ்சாப் மாகாணமும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 593 பேரும், சிந்து மாகாணத்தில் 508 பேரும் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏப்ரல் 4 ஆம் தேதிவரை விமான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளனர்.

கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x