Published : 28 Mar 2020 01:58 PM
Last Updated : 28 Mar 2020 01:58 PM

நீளும் உதவிக்கரம்: 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வழங்கிய ஓட்டல் வாடிக்கையாளர்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ஓட்டல்கள் மூடப்படுவதற்கு முன்னால், வாடிக்கையாளர் ஒருவர் 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வைத்துவிட்டுச் சென்றார்.

கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேரைக் கடந்தது. அங்கு நேற்று மட்டும் 398 பேர் உயிரிழந்தனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து உணவகங்களும் மூடப்பட்டன. சில ஓட்டல்களில் பார்சல் வசதி மட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு ஓட்டலில், அடையாளம் தெரியாத வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள ஊழியர்களுக்கு 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ரோஸ் எட்லண்ட் கூறும்போது, ''இந்த உலகில் நிஜமான, அற்புதமான மனிதர்களும் இருக்கின்றனர். அத்தகையோர் இருக்கும் பூமியில் நாமும் வாழ்வது மகிழ்ச்சியைத் தருகிறது.

அவர் அளித்த 10 ஆயிரம் டாலர்களும் ஊழியர்களுக்குச் சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டன. 200 ஊழியர்களுக்கும் தலா 500 டாலர்கள் வழங்கப்பட்டன. அந்த வாடிக்கையாளர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் ஓட்டல்கள் மூடப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x