Published : 27 Mar 2020 05:12 PM
Last Updated : 27 Mar 2020 05:12 PM

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை: ட்ரம்ப்- ஜி ஜின்பிங் ஆலோசனை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் கரோனா வைரஸ் தொடர்பாக தொலைபேசியில் உரையாடினர்.

இதில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார். மேலும் இரு தரப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று ஜி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, ”இந்த கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து வெளியே வர சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ ஜி ஜின்பிங் உடனான உரையாடல் நன்றாக இருந்தது. சீனா அவ்வைரஸ் குறித்த வலுவான புரிதலைக் கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சீனா முன்னதாகவே கரோனா வைரஸ் மரபியல் சார்ந்த தகவல்களை உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது. தற்போது கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள சீனா பிற நாடுகளுக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் 19 காய்ச்சலுக்கு சுமார் 5,32,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,090 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x