Last Updated : 27 Mar, 2020 09:58 AM

 

Published : 27 Mar 2020 09:58 AM
Last Updated : 27 Mar 2020 09:58 AM

கரோனாவிடம் தோற்றுவிடுவோம்;ஒற்றுமைதான் முக்கியம்: பொருளாதாரத் தடைகளை நீக்குங்கள்; ஜி20 நாடுகள் மாநாட்டில் ஐ.நா. பொதுசெயலாளர் எச்சரிக்கை

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்: கோப்புப்படம்

நியூயார்க்

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இருக்கிறோம், இன்னும் நாம் வெற்றி பெறவில்லை. இந்த போரில் நாம் வெல்ல வேண்டுமெனில் உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை அவசியம், பொருளாதார தடைவிதிக்கப்பட்ட நாடுகள் மீதான தடை விலக்க வேண்டும், போர்க்கால திட்டமிடல் அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்தார்

கோவிட்- 19 வைரஸ் உலக நாடுகளை பேரபாயத்தில் தள்ளி உள்ள சூழ்நிலையில் உடனடியாக ஜி-20அமைப்பை கூட்டி இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று சீனா, பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தின. இதைத்தொடர்ந்து ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவரான சவுதி அரேபிய அரசர் சல்மான் தலைமையில் ஜி-20அமைப்பின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மாநாடு நேற்று நடந்தது

ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் வீடியோ மாநாட்டுக்கு சவுதி அரேபிய அரசர் சல்மான் தலைமை வகித்தார். காணொலி மூலம் நடைமுறைகளை சவுதிஅரேபியா நிர்வாகம் ஒருங்கிணைத்தது.

மாநாட்டில் ஜி-20 அமைப்பின் உறுப்பினர்களான அர்ஜென்டைனா, ஆஸ்திரேலியா, பிரேசில் ,கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தெற்கு ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.

சிறப்பு அழைப்பாளர்களாக பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற வகையில் ஸ்பெயின், சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர ஐநா சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகிய சர்வதேச அமைப்புகளும் விடியோ மாநாட்டில் பங்கு கொண்டன.

மாநாட்டை துவக்கி வைத்து பேசிய சவுதிஅரேபியா அரசர் சல்மான், உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பேரபாயத்துக்கு எதிராக கூட்டணி அமைத்து ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை இந்த மாநாட்டின் மூலம் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசுகையில், “ கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் இருக்கிறோம், இன்னும் நாம் வெற்றி பெறவில்லை. உலகில் உள்ள ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸை எதிர்த்து நடத்தும் போரில் நிபந்தனையில்லாமல் உதவி செய்து வருகின்றன.இந்த போரில் சரியான திட்டமிடலுடன் களத்தில் இறங்க வேண்டும்.

ஜி20 நாடுகள் மாநாட்டில் ஒற்றுமைதான் மிகமுக்கியம். நாடுகளுக்கு இடையே முரண்பாடுகள் இருந்தாலும் அதை இந்த நேரத்தில் களைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் கரோனா வைரஸ் குறித்த முறையான பரிசோதனை, கண்டுபிடிப்பு, தனிமைப்படுத்துதல், சிகிச்சை முறை, கட்டுப்பாடு, மக்கள் நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள், போன்றவை மூலம்தான் கரோனா வைரஸ் பரவுவதில் இருந்து கட்டுப்படுத்த முடியும். கரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் இல்லாத சூழலி்ல இந்த நடவடிக்கைகள் அவசியம்.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு கரோனா வைரஸைக் கட்டுப்டுத்தத் தேவையான ஆதரவை வழங்கிட வேண்டும். பல்வேறு நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடைகள் இந்த நேரத்தில் நீ்க்கி, கரோனாவுக்கு எதிராகப் போரிட ஊக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x