Published : 26 Mar 2020 06:01 PM
Last Updated : 26 Mar 2020 06:01 PM

கரோனா பாதிப்பு: தொடரும் பலி; எங்கு தவறியது ஸ்பெயின்?

கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயினில் மட்டும் 738 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் சமீபத்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிகழ்வாக இது பதிவாகியுள்ளது. இதன் விளைவாக கரோனா தொற்றின் உலகளாவிய மையமாக ஸ்பெயின் உருவாகியுள்ளது.

ஸ்பெயினில் மட்டும் கரோனா வைரஸால் 56,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இத்தாலிக்கு அடுத்து கரோனா வைரஸால் அதிக உயிரிழப்பை ஸ்பெயின் அடைந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் நான்கு மாதங்களில் உலகம் முழுவதும் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. இதில் சீனா, இத்தாலி ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்தன. இதில் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை சீனா குறிப்பிட்ட நாட்களில் கட்டுப்படுத்த, மற்றொரு பக்கம் இத்தாலியோ தற்போது வரை பெரும் உயிரிழப்பை கரோனாவுக்காக கொடுக்கிறது.

இதில் சீனா, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து ஏற்பட்ட இழப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத வரிசையில் இணைந்துள்ளது ஸ்பெயின்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஸ்பெயின் ஏன் தாமதமாகச் செயல்பட்டது என்று மருத்துவ நிபுணர்கள் பலர் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் பெர்னாட்டோ கூறும்போது, ''பிப்ரவரி 9 ஆம் தேதி ஸ்பெயினில் கரோனாவால் 9 பேர்
மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஆறு வாரம் கழித்து தினமும் ஏற்படும் நூற்றுக்கணக்கான இறப்புகளின் புள்ளி விவரங்களை நான் அளித்துக் கொண்டிருக்கிறேன” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் பெர்காமில் பிப்ரவரி மாதம் நடந்த சாம்பியன் லீக் போட்டியில் ஸ்பெயின் வலென்சியா கால்பந்து ரசிகர்கள் 2,500 பேர் அட்லாண்டா ஆதரவாளர்கள் 4,000 பேருடன் இணைந்து கலந்துகொண்டனர். இங்குதான் மிகப் பெரிய தொற்று நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்துதான் ஸ்பெயினில் கால்பந்து வீரர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

ஆனால், இந்த கரோனா வைரஸ் தொற்று ஸ்பெயினில் பரவிய விதம் அசாதரணமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 8க்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ஸ்பெயினில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் கூட்டம் கூடத் தடை செய்யப்பட்டது.

ஆனால், அங்கு விளையாட்டுப் போட்டிகளைக் காண ரசிகர்கள் திரண்டு கொண்டிருந்தார்கள். இதன் மூலம் ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொற்று விரைவாகப் பரவியது. இதனால் ஸ்பெயின் இன்று பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதுமட்டுமில்லாது கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஸ்பெயின் அரசு காட்டிய மெத்தனமும், மருத்துவச் சேவைகளில் உள்ள குறைபாடும் இன்று அந்நாடு எதிர்கொண்டிருக்கும் பெரும் சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது என்று விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x