Published : 25 Mar 2020 06:55 PM
Last Updated : 25 Mar 2020 06:55 PM

இது நம்முடைய சோதனை நேரம்; ஒற்றுமை அவசியம்: கோலி, அனுஷ்கா கூட்டாக வேண்டுகோள்

'இது நம்முடைய சோதனை நேரம், ஒற்றுமை அவசியம்' என்று 21 நாள் ஊரடங்கு குறித்து கோலி, அனுஷ்கா இருவரும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 562 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் கரோனா பரவல் குறித்து பல்வேறு வேண்டுகோள்களை வைத்த அவர், 21 நாட்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் 21 நாள் ஊரடங்குக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ''இது நம்முடைய சோதனை நேரம். நிலைமையின் தீவிரத்தை அனைவரும் உணர வேண்டும். நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்.

இது அனைவருக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள். பிரதமர் அறிவித்ததைப் போல அனைவரும் வீட்டிலேயே இருங்கள். சமூக இடைவெளி மட்டுமே கோவிட்-19 காய்ச்சலுக்கான ஒரே மருந்து'' என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மார்ச் 22-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்கக் கோரி, மக்களிடையே சுய தனிமைப்படுத்துதல் அவசியம் என்று கோலி, அனுஷ்கா இருவரும் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x