Published : 25 Mar 2020 11:54 AM
Last Updated : 25 Mar 2020 11:54 AM

கரோனா தொற்று பரவிய வூஹானில் இரு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கம்

கரோனா வைரஸ் தொற்று பரவிய வூஹான் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த ஜனவரி மாதத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வூஹான் நகரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், வூஹான் நகருக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் சீனாவில் நோய்த் தொற்று ஏற்பட்ட வூஹான் நகரில் 2 மாதங்களாக இருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது,. இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

மேலும், பேருந்தில் பயணிக்கும் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுகின்றனர் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x