Last Updated : 24 Mar, 2020 04:53 PM

 

Published : 24 Mar 2020 04:53 PM
Last Updated : 24 Mar 2020 04:53 PM

மார்ச் 25-ல் இருந்து பயணக் கட்டுப்பாடுகள் இல்லை: உலகமே லாக் டவுனில் இருக்கும்போது  சீனா அதிரடி 

பெரும்பாலான உலக நாடுகள் லாக் டவுனில் இருக்கும்போது, மார்ச் 25-ல் இருந்து பயணக் கட்டுப்பாடுகள் இல்லை என்று சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த ஜனவரி மாதத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வூஹான் நகரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வூஹான் நகருக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குக் கரோனா பரவியது. தற்போது உலகம் முழுவதும் கரோனாவால் 14,652 பேர் பலியாகி உள்ளனர். 3,34,981 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பெரும்பாலான நாடுகள் முழுமையாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே தொடர் நடவடிக்கைகளால் சீனாவில் கடந்த 19-ம் தேதியில் இருந்து புதிய உள்நாட்டுத் தொற்று எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பயணத்துக்கான கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்) நள்ளிரவில் இருந்து தளர்த்தப்பட உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. எனினும் வூஹான் நகரத்தில் ஏப்ரல் 8-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23-ம் தேதியில் இருந்து 2 மாதங்களாக சீன மக்கள், கட்டுப்பாட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x