

கரோனா வைரஸின் கிடுக்கிப்படியில் சிக்கி அமெரிக்கா மூச்சுத் திணறுகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்தனர், 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுக்கலைத் தடுக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் கரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 43,700 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 139 ேபர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்மிக்கை 550ஆக அதிகரித்துள்ளது.
இதில் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது நியூயார்க் மாநிலம் மட்டும்தான். அமெரிக்காவில் கரோனா பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட்டாக மாறிவிட்டது. நியூயார்க் நகரில் மட்டும் 2 அமெரிக்கர்களில் ஒருவர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் மட்டும் நேற்று ஒரேநாளில் 5,085 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,875 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிேநரத்தில் 43 பேர் உயிரிழந்ததையடுத்து நியூயார்க் நகரின் உயிர்பலி 157 ஆக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் நியூயார்க் நகரில் பலியாவோர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
கரோனா வைரஸ் பரவல் குறித்து அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் மருந்துப் பொருட்கள் பதுக்கலில் ஈடுபடுவோர், அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கைகழுவும் திரவும், முகக்கவசம் ஆகியவற்றை பதுக்கக்கூடாது.
மிகவும் எளிமையாகச் சொல்வதென்றால், தங்களின் சொந்த லாபத்துக்காக எந்த அமெரிக்க மக்களையும் சுரண்டுவதற்கு நாங்கள் அனுமதி்க்கமாட்டோம். மோசடியில் ஈடுபடுவோர், பதுக்கலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க நீதித்துறையை கேட்டுக்கொண்டுள்ளோம்.
நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா ஆகிய நகரங்களுக்கு தேவையான அனைத்து மருந்துப் பொருட்களும் போதுமான அளவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.80 லட்சம் என்-95 முகக்கவசம், 1.33 கோடி முகக்கவசம் நாடுமுழுவதும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்