Published : 22 Mar 2020 07:43 PM
Last Updated : 22 Mar 2020 07:43 PM

கரோனா வைரஸ் பாதிப்பு: அமெரிக்காவின் உதவியை மறுத்த ஈரான் தலைவர்

கரோனா வைரஸ் காரணமாக ஈரான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள சூழலில், அமெரிக்காவின் உதவியை ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலிகாமெனி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 129 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட் காய்ச்சலுக்கு ஈரானில் பலியானவர்கள் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கோவிட் காய்ச்சலுக்கு ஈரானில் 21,638 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் ஈரானுக்கு அமெரிக்கா உதவி செய்ய முன் வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த உதவியை ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலிகாமெனி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அயத்துல்லா அலிகாமெனி கூறும்போது, “இந்தக் குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையானது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் உதவி செய்ய வருகிறேன் என்று வைரஸை இன்னும் கூடுதலாகப் பரப்பினால் என்ன செய்வது” என்று கேட்டுள்ளார்.

தடையை மீறி அணு ஆயுத சோதனைகளை ஈரான் நடத்தியதன் காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில வருடங்களாகவே பொருளாதாரத் தடையை விதித்தது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x