Published : 21 Mar 2020 12:45 PM
Last Updated : 21 Mar 2020 12:45 PM

இத்தாலியில் ஒரேநாளில் கரோனா வைரஸுக்கு 637 பேர் பலி

இத்தாலியில் ஒரே நாளில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 637 பேர் பலியானதைத் தொடர்ந்து அவ்வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,032 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி அரசுத் தரப்பில், ''இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 637 பேர் பலியாகினர். கோவிட்-19 காய்ச்சல் காரணமாக இத்தாலியில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இந்த இறப்பின் மூலம் இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,032 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாலியில் 2,600-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டில் கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 8.3 சதவீதம் ஆகும்.

இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த 8 டாக்டர்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே உயிரிழந்தனர். இந்நிலையில், கோவிட்-19 காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 டாக்டர்கள் அங்கு உயிரிழந்தனர். இதன் மூலம் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான டாக்டர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x