Published : 21 Mar 2020 08:58 AM
Last Updated : 21 Mar 2020 08:58 AM

பேரிடரில் இருந்து தப்பிக்க 25 ஆண்டுகளுக்கு முன்பே 1,500 ஏக்கரில் பண்ணைத் தோட்டம் அமைத்த கோடீஸ்வரர்: கரோனா பீதியில் குடும்பத்துடன் இடம்பெயர்கிறார்

பேரிடரில் இருந்து தப்பிப்பதற்காக பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஊருக்கு ஒதுக்குபுறத்தில் சகல வசதிகளுடன் கூடிய பண்ணைத் தோட்டத்தை அமைத்திருக்கிறார்.

தற்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமது குடும்பத்தினருடன் அங்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார்.

பிரிட்டன் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வருபவர் பீட்டர் டாவே (65). இவர் கடந்த 1995-ம் ஆண்டு பிரிட்டனின் ஒதுக்குபுறத்தில் உள்ள நார்ஃபோல்க் என்ற சிறிய கிராமத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்காக அந்த இடத்தை வாங்கிய அவரது எண்ணம் திடீரென மாறியது.

அங்கு மிகப்பெரிய பண்ணைத் தோட்டத்தை அமைத்தார். 5 சொகுசு மாளிகைகள், தூய்மையான குடிநீர், இயற்கை உணவுகள், பழத்தோட்டம், கால்நடை பண்ணை, கேளிக்கை விடுதிகள், பொழுதுப்போக்கு பூங்காக்கள் என அனைத்து அம்சங்களும் அங்கு இருக்கும் வகையில் அதனை வடிவமைத்தார்.

தற்போது பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதன் பாதிப்பை தவிர்ப்பதற்காக தனது குடும்பத்துடன் அவர் அங்கு குடிபெயர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

என்றேனும் ஒரு நாள், உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய பேரழிவு நிகழும் என்பதை தீர்க்கமாக நம்புகிறவன் நான். அந்த சமயத்தில், உலகத்துடனான தொடர்பை துண்டித்துவிட்டு இடம் பெயர்வதற்காக, அனைத்து வசதி களுடன் கூடிய பகுதியை அமைக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

தற்போது எனது குடும்ப உறுப்பினர்கள் 30 பேருடன் இங்கு குடிபெயர்ந்திருக்கிறேன். 120-க்கும் மேற்பட்டோர் இங்கு தங்க முடியும். அதற்கு அவர்கள் குறிப்பிட்ட தொகையை வாடகையாக செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x