Published : 19 Mar 2020 12:33 PM
Last Updated : 19 Mar 2020 12:33 PM
அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான மரியோ தியாஸ்-பாலர்ட் மற்றும் பின் பெக் ஆடம்ஸ் இருவரும் தங்களுக்கு கோவிட் காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த சில எம்.பி.க்களும் கோவிட் காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மரியோ பாலர்ட் கூறும்போது, “உடல் நிலை முன்பை விட நலமாக உள்ளது. நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆலோசனைகளை அனைவரும் பின்பற்றி கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயலாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணிகள் அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT