Published : 18 Mar 2020 03:19 PM
Last Updated : 18 Mar 2020 03:19 PM

வெட்டுக்கிளிகளின் மாபெரும் படையெடுப்பால் பயிர்கள் நாசம்: சீனாவின் உதவியை நாடிய பாகிஸ்தான் விவசாயிகள்

2020ல் மட்டும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 3 முறை வெட்டுக்கிளிகள் கூட்டம் வயல்களில் புகுந்து நிகழ்த்திய அதகளத்தில் ஏகப்பட்ட ஏக்கர் கோதுமைப் பயிர்கள் நாசமானதாக சாதுல்லா ஜெஹிரி என்று விவசாயி சர்வதேச செய்தி ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் இதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நஷ்டமாக இழந்து வருகின்றனர்.

“அடுத்த பயிர்க்காலக்கட்டத்தில் 20-25 ஏக்கர்கள் பருத்திப் பயிரிடலாம் என்று யோசித்திருக்கிறேன், ஆனால் இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்து விடும் என்று உண்மையில் அச்சப்படுகிறேன். பாகிஸ்தான் விவசாயிகள் பிரதான பயிர் பருத்திப் பயிராகும்.

இந்நிலையில் பாகிஸ்தான் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்வதைத் தடுக்க பாகிஸ்தான் சீனாவின் உதவியை நாட, கடந்த மாதம் 24-ம் தேதி சீனாவிலிருந்து 8 பேர் கொண்ட நிபுணர்கள் குழு வயல்வெளிகளைப் பார்வையிட்டுச் சென்றனர். இதற்காக பூச்சித் தெளிப்பான்கள் மற்றும் பூச்சி அழிப்பு மருந்துகளையும் சீனா தருவதாக உறுதியளித்துள்ளது. சுமார் 300 டன்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை சீனா சப்ளை செய்யவுள்ளது.

இந்த பூச்சித்தெளிப்பான் சாதனத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று சீன நிபுணர்கள் விவசாயிகளுக்குச் சொல்லித்தரவிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது ஜனவரி மாதம் நாட்டின் பணவீக்க விகிதம் 14.6% ஆக அதிகரித்துள்ளது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஒவ்வொரு விவசாயியும் 200 அல்லது 300 மூட்டைகள் கோதுமை அறுவடை செய்வார்கள், ஆனால் அந்தக்காலம் போய் விட்டது, வெட்டுக்கிளிகள் தின்று விடுகின்றன, என்கிறார் அப்துல் காதிர் என்கிற விவசாயி. பருத்தி பயிர்களை வெட்டுக்கிளிகள் தின்று விட்டால் குழந்தைகள் பட்டிணி கிடக்க வேண்டியதாகிறது என்கிறார் அவர்.

பாகிஸ்தானில் பெரிய வேலைவாய்ப்பைக் கொடுப்பதே ஜவுளி ஆலைகள்தான், அதற்கு பருத்தி உற்பத்தி 60% பங்களிப்பைச் செய்து வருகிறது. இந்த ஆண்டு 9.45 மில்லியன் பேல்கள் காட்டன் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இலக்கை விட 26% குறைவாகும்.

பெரிய மழைக்குப் பிறகு ஒரு வறட்சி ஏற்படும்போது வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் பாகிஸ்தானில் மட்டும் சுமார் 140,000 ஏக்கர்களுக்கான பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்துள்ளன.

1993க்குப் பிறகு மிகப்பெரிய வெட்டுக்கிளி தாக்குதல் இதுதான் என்கின்றனர் நிபுணர்கள். அரசு மருந்தடித்தாலும் அனைத்தையும் கொல்ல முடியாது, இது கடவுளின் படைப்பு அவை மீண்டும் பிறக்கும் என்கிறார் ஜெஹ்ரி என்கிற அந்த விவசாயி.

-ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x