மதசார்பற்ற வலைப்பதிவர்கள் எல்லை மீறக் கூடாது: வங்கதேச போலீஸ் அறிவுரை

மதசார்பற்ற வலைப்பதிவர்கள் எல்லை மீறக் கூடாது: வங்கதேச போலீஸ் அறிவுரை
Updated on
1 min read

மதசார்பற்ற கருத்துக்களை எழுதும் வலைப்பதிவர்கள் தங்களது எல்லையை மீற வேண்டாம் என்று வங்கதேச போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "வலைப்பதிவர்கள் எந்த ஒரு மத நம்பிக்கையுடையவர்களையும் புண்படுத்தக்கூடாது. தங்களது எல்லையை மீறி எழுதக் கூடாது. சுதந்திர எழுத்தாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் தங்களது வார்த்தைகளால் பிறரை காயப்படுத்தினால் அது பெரும் குற்றம் என்பதை உணர வேண்டும்" என்றார்.

வங்கதேசத்தில் எழுத்தாளர்கள் படுகொலை நடந்து வருவதை தடுக்க தவறியதாக அந்நாட்டின் போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து வங்கதேச காவல் ஆணையர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த வாரம் மதச்சார்பற்ற கொள்கை சார்ந்த பதிவுகளை எழுதி வந்த வலைப்பதிவர் நிலாய் நீல் (40) அவரது வீட்டில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக ஆவிஜித் ராய் (44), வாசிகுர் ரகுமான் (24) , அனந்த பிஜோய் தாஸ் (33) என நிகழ்ந்த மூன்று எழுத்தாளர்களின் படுகொலைகள் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in