Published : 16 Mar 2020 06:06 PM
Last Updated : 16 Mar 2020 06:06 PM

கரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை: இலங்கை

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கையின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''இலங்கையில் கோவிட்-19 காய்ச்சல் அறிகுறிகளை மறைப்பவர்கள் வாரண்ட் ஏதும் இன்றி கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.மேலும் கோவிட் -19 காய்ச்சல் தொடர்பான போலியான வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை சமூக வலைதளத்தில் கோவிட்-19 காய்ச்சலைப் பற்றி வதந்தி பரப்பிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 18 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸால் அதிகமாக இத்தாலி பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x