

கரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டாளர்கள் இல்லாமலேயே இந்த ஆண்டு அதன் பாரம்பரிய ஈஸ்டர் வார பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்று வாடிகன் ஞாயிற்றுக்கிழமை கூறியது.
சீனாவில் உருவான கரோனா எனும் கொடிய வைரஸ் நோய் காரணமாக இத்தாலியில் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கு 21 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் நோய் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வாடிகனின் புகழ்பெற்ற தேவாலயம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
கடந்த வாரம் அங்குள்ள சிற்றாலயத்தில் போப் ஆண்டவர் தனியாகவே பிரார்த்தனை நடத்தியதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் இதுவரை இல்லாத ஒரு வரலாற்று சம்பவமாக ஒளிபரப்பின.
இந்நிலையில் வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாடிகனில் உள்ள போப் நிர்வாக அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
பொது நடவடிக்கைகளில் பங்கேற்கும் போப் பிரான்சிஸுடன் அவரது பார்வையாளர்களை, அரச தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் ஒருங்கிணைக்கும் பொறுப்பு இந்த அலுவலகத்திற்கு உள்ளது.
தற்போதைய உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை காரணமாக, ஈஸ்டர் புனித வாரத்தின் அனைத்து வழிபாட்டு கொண்டாட்டங்களும் பிரார்த்தனைக்கு வரவிரும்பும் பார்வையாளர்கள் நேரடியாக பங்கு பெறாமலேயே நடைபெறும்.
அடுத்த மாதம் ஏப்ரல் 12 வரை, பரிசுத்த பிதா தலைமையிலான பிரார்த்தனைக் கூட்டம் வாடிகனின் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தில் அதன் நேரடி ஒளிபரப்பில் மட்டுமே பொதுப் பார்வையாளர்கள் காணலாம்.
இவ்வாறு வாடிகனில் உள்ள போப் நிர்வாக அலுவலகம் தெரிவித்துள்ளது.