Published : 13 Mar 2020 10:13 AM
Last Updated : 13 Mar 2020 10:13 AM

வழக்கறிஞர்களுக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு: மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான ஊழல் புகார் மீது விசாரணை நடக்கவில்லை

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக 2009-ம் ஆண்டில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை (1எம்டிபி) அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் தொடங்கினார். இந்நிறுவனத்தின் பல கோடி நிதியை ரசாக் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ரசாக் மறுத்தார்.

இந்நிலையில் 2018-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நஜீப் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று, மகாதிர் முகமது பிரதமரானார். இதையடுத்து, நஜீப் ரசாக் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த வழக்கு மந்தமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரசாக் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வராததால் இந்த வழக்கில் நேற்று விசாரணை நடைபெறவில்லை.

ரசாக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு கோவிட்-19வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. அப்போது இதுகுறித்த மருத்துவரின் கடிதத்தை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர். மலேசியாவில் இந்த வைரஸால் இதுவரை 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x