Published : 12 Mar 2020 04:25 PM
Last Updated : 12 Mar 2020 04:25 PM

பாலியல் வன்கொடுமை: தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை 

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி பிரபல தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

'தி ஆர்டிஸ்ட்', 'தி இமிடேஷன் கேம்', 'ஜாங்கோ அன்செயிண்ட்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் வைன்ஸ்டீன் கம்பெனியின் துணை நிறுவனர் ஹார்வீ வைன்ஸ்டீன். இவர் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். இவர் படப்பிடிப்பின்போது நடிகைகளுக்குப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்பட்டது.

நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், க்வெனித் பேல்ட்ரோ, உமா துர்மேன் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நடிகைகள் ஹார்வீயால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகக் குற்றம் சாட்டினர்.

ஹார்வீ வைன்ஸ்டீனுக்கு எதிராகப் பாலியல் புகார் தெரிவித்தவர் நடிகை ரோஸ் மெகாவென். அவருக்கு ஆதரவாக, அவரது தோழியும் நடிகையுமான அலிஸா மிலானோ 2017-ம் ஆண்டு ‘மீ டூ’ எனும் ஹேஷ்டேகை உருவாக்கினார். அது பின்னாளில் ஓர் இணைய இயக்கமாக உருவெடுத்தது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்குப் பிறகு, மன்ஹாட்டன் கிரிமினல் நீதிமன்றத்தில் நியூயார்க் நீதிபதி, ஹார்வீக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த ஹார்வீ, ''என்ன நடக்கிறது என்று குழப்பமாக உள்ளது. இந்த நாட்டை நினைத்து கவலைப்படுகிறேன். மீ டூ விவகாரத்தில் என் மீது குற்றம் சுமத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக எனது இரக்க உணர்வு அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக ஹார்வீ மீது குற்றம் சாட்டிய 24 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஹார்வீ இனி வரலாற்றில், பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி என்றே அறியப்படுவார். அவர் சிறைக்குச் செல்கிறார். எனினும் அந்தக் காலம் ஹார்வீ சீரழித்தவர்களின் வாழ்க்கையோ, அவர் அழித்த எதிர்காலத்தையோ மீட்டுத் தராது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x