

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த நகரம் சீல் வைக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீன அரசின் அதிதீவிர நடவடிக்கைகளால் வூஹானில் காய்ச்சல் பரவுவது கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. உயிரிழப்பும் குறைந்து வருகிறது.
அங்குள்ள மருத்துவமனையில் 87 வயது முதியவர் ஒருவர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெறுகிறார். சில நாட்களுக்கு முன்பு சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக அவரை ஸ்டிரச்சரில் அழைத்துச் சென்றனர். அப்போது மாலை நேரம். சூரியன் அஸ்தமனமாகி கொண்டிருந்தது.
அவரை அழைத்துச் சென்ற மருத்துவர், சூரிய அஸ்தமனத்தை பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். அந்த நோயாளி ஆசையுடன் தலையசைத்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற மருத்துவமனை வளாக நடைபாதையில் ஸ்டிரச்சர் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. முதியவயது நோயாளியும் மருத்துவரும் சேர்ந்து சூரிய அஸ்தமனத்தை ரசித்தனர்.
இந்த புகைப்படத்தை, சென்சென் ஜாங் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.