அச்சமூட்டும் கரோனா: இத்தாலியில் 230 பேர் பலி;6 ஆயிரம் பேர் பாதிப்பு: தியேட்டர், அருங்காட்சியகம் நாடுமுழுவதும் மூடல்

வெனிஸ் நகரில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்லும் காட்சி : படம் உதவி ட்விட்டர்
வெனிஸ் நகரில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்லும் காட்சி : படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read

உலகத்தை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகமான உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதுவரை இத்தாலியில் 233 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா, தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் இத்தாலியில் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, இத்தாலியின் லம்பார்டி மண்டலம் முழுவதையும் சீல் வைத்துக் கண்காணிப்புக்குள் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், இத்தாலி முழுவதும் சினிமா தியேட்டர், நாடக அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மறு அறிவிப்பு வரும்வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவைக் கதிகலங்க வைத்துவரும் கரோனா வைரஸ் உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை 91 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் பலியாகியுள்ளார்கள், உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இத்தாலியில் 233 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிர மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 462லிருந்து 567 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலி பிரதமர் கான்டோ
இத்தாலி பிரதமர் கான்டோ

இந்த கரோனா வைரஸ் பணக்காரர்கள் அதிகமாக வாழும் வடக்குப் பகுதியிலிருந்து, ஏழைகள் அதிகமாக வாழும் தெற்குப்பகுதிக்கு பரவுகிறதா என்று தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இத்தாலியில் உள்ள 22 மண்டலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரோம் நகரை உள்ளடக்கிய லாஜியா பிராந்தியம், பாரி நகரை உள்ளடக்கிய புக்லியா பிராந்தியம் ஆகியவற்றில் நேற்று தலா ஒருவர் கரோனா வைரஸால் உயிரிழந்தனர்

இத்தாலியின் மருத்துவ சேவைப் பிரிவு கூறுகையில், " லம்பார்டி பிராந்தியத்திலிருந்து அதிகமான அளவு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக மிலன், வெனிஸ், பார்மா, ரிமினி ஆகிய நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் லம்பார்டி பிராந்தியம், வென்டோ பிராந்தியம் ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக சீல் வைத்துக் கண்காணிப்பில் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இத்தாலி முழுவதும் திரையரங்கம், நாடக அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மறு அறிவிப்பு வரும் வரை திறக்க அந்நாட்டு பிரதமர் ஜியுஸ்பி கான்டே உத்தரவிட்டுள்ளார் மேலும், நைட் கிளப், சூதாட்ட கிளப், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

வடக்கு இத்தாலி பகுதியில் 1.50 கோடி மக்கள் வாழும் பகுதி சீல் வைக்கப்பட்டுக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in