

அமெரிக்கர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அட்லாண்டாவில் உள்ள நோய் தடுப்பு மையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹோப்கின்ஸ் மருத்துவ மையம் கூறும்போது, ”அமெரிக்காவில் 299 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கோவிட் 19 காய்ச்சலுக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மருத்துவ சிகிச்சைக்காகவும் 8.3 பில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கீடு செய்தது.
சீனாவின் ஹூபே மாநிலம், வூஹான் நகரை மையமாக வைத்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் 3,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் 91 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.