Published : 06 Mar 2020 01:55 PM
Last Updated : 06 Mar 2020 01:55 PM

கரோனா வைரஸ் பாதிப்பு: பெத்லகேம் தேவாலயம் மூடல்

கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான பெத்லகேம் தேவாலயம் மூடப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பில், "தெற்கு ஜெருசலேமில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் அமைந்துள்ள தேவாலாயம், கோவிட்-19 ( கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக இரு வாரங்களுக்கு மூடப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வர தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெத்லகேமில் 7 பேருக்கு கோவிட் - 19 ( கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பாலஸ்தீன அதிகாரிகள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

மேலும், பாலஸ்தீனத்தில் பள்ளிகளும், மசூதிகளும், ஓட்டல்களும் மூடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கோவிட் காய்ச்சலால் இத்தாலியும் தென் கொரியாவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x