கரோனா வைரஸ்: ஈரானில் பலி எண்ணிக்கை 210 ஆக இருக்கலாம்? 

கரோனா வைரஸ்: ஈரானில் பலி எண்ணிக்கை 210 ஆக இருக்கலாம்? 
Updated on
1 min read

ஈரானில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 210 இருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் , “ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் கரோனா வைரஸால் அந்நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஆனால் ஈரான் வெளியிட்ட எண்ணிக்கையைவிட உண்மை நிலவரம் மூன்று மடங்கு இருக்கும். ஈரானில் கொவிட் 19 காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு 210வரை இருக்கலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இதனை ஈரான் அரசு பொய்யான தகவல் என்று முழுவதுமாக மறுத்துள்ளது. முன்னதாக ஈரானில் கோவிட் 19 காய்ச்சல் காரணமாக 34 பேர் பலியானதாக ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை ஈரான் அரசு சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.

மேலும் ஈரானில் கோவிட் 19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டது. பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களும் மூடப்பட்டுள்ளன.

முன்னதாக, ஈரானில் கரோனா வைரஸ் குறித்த அதீத அச்சுறுத்தலை அமெரிக்கா ஏற்படுத்துவதாக அந்நாட்டு
அதிபர் ஹசன் ரவ்ஹானி குற்றம் சாட்டியுள்ளார்.

உலக அளவில் கரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 81,200க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in