Published : 29 Feb 2020 07:56 AM
Last Updated : 29 Feb 2020 07:56 AM

ஐநா சபை கூட்டத்தில் இந்தியா ஆட்சேபம்: தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளிக்க கூடாது

“தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ஐநா சபையில் நடைபெற்ற மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதிநிதி கண்டனம் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற 43-வது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் மனித உரிமை மீறல் நடப்பதாக பாகிஸ்தான் விமர்சித்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, “தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்.

தீவிரவாத முகாம்களை அவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களின் சதித் திட்டங்களை முறியடித்து ஜம்மு காஷ்மீரில் சீரமைப்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அங்கு இயல்பு நிலை விரைவில் திரும்பும்” என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் பாகிஸ்தானுக்கு 10 அறிவுரைகளை வழங்கினார்:

தீவிரவாதிகளை தூக்கிப்பிடிப்பதைப் பாகிஸ்தான் தலைமை கைவிட வேண்டும். சட்டத்துக்கு புறம்பான ஆக்கிரமிப்புக்கு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் விலகிச் செல்ல வேண்டும்.

பாகிஸ்தானில் வாழும் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகளை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களையும் சிறுமிகளையும் துன்புறுத்தி அவர்களை மத மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

ஷியா முஸ்லிம்கள், அகமதியர்கள், இஸ்மாலியா, ஹஜாரா உள்ளிட்ட முஸ்லிம் இன மக்களுக்கு எதிரான மத துன்புறுத்தலை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறுவர்களை தற்கொலை படை தாக்குதல் உள்ளிட்ட கொடூரமான தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு இந்திய பிரதிநிதி பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x