

அண்டார்டிகாவில் அமைந்துள்ள பனிப்பாறைகளில் சிவப்பு நிறம் படர்ந்திருப்பது போன்ற புகைப்படத்துக்கான விளக்கத்தை உக்ரைனைச் சேர்ந்த அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியில் பனிப்பாறைகளில் ரத்தம் தெளித்தது போன்று சிவப்பு நிறம் படர்ந்து காணப்படும் புகைப்படங்களை UAMON என்ற கல்விசார் ஃபேஸ்புக் பக்கம் பதிவிட்டிருந்தது.
பனிப்பாறைகளில் சிவப்பு நிறம் படர்ந்திருப்பதற்கான காரணத்தை நெட்டிசன்கள் பலரும் கேட்கத் தொடங்கினர். இப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து இதற்கான பதிலை உக்ரைன் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிவியலாளர்கள் கூறுகையில், “பனிப்பாறைகள் சிவப்பு நிறமாகக் காணப்படுவதற்கு கிளமிடோமோனாஸ் நிவாலிஸ் என்ற கடல் பாசிதான் காரணம். அதிகபட்ச பனியில் வாழும் தன்மை கொண்ட இப்பாசி உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் காணப்படுகிறது. அந்தப் பாசியில் இடம் பெற்றுள்ள குளோரேபிளாஸ்ட் சிவப்பு நிறத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தனர்.