Last Updated : 27 Feb, 2020 03:50 PM

 

Published : 27 Feb 2020 03:50 PM
Last Updated : 27 Feb 2020 03:50 PM

'என் மகனின் துயர வாழ்க்கையை யாரும் வாழக்கூடாது': தனக்குக் கிடைத்த நிதி ரூ.3.4 கோடியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கிய ஆஸி. சிறுவன் குவாடன் பேலஸ்

குள்ளமாக இருப்பதால், எல்லோரும் கிண்டல் செய்வதால் என்னைக் கொன்றுவிடுங்கள் என்று ஆஸ்திரேலியாவின் 9 வயது சிறுவன் குவாடன் பேலஸ் கண்ணீர் விட்டு அழுத காட்சியை அவரின் தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின் குவாடன் பேலஸுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து உதவிகளும், நிதியும் குவியத் தொடங்கின. அவ்வாறு கிடைத்த ரூ.3.4 கோடியை (4.75 லட்சம் டாலர்) தொண்டு நிறுவனத்துக்கு குவாடன் பேலஸ் வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸின் 9 வயது மகன் குவாடன். சிறுவன் குவாடன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

கொன்றுவிடுங்கள்

கடந்த வாரம் பள்ளியில் இருந்து குவாடனை அவரின் தாய் காரில் அழைத்து வந்தார். அப்போது காரில் அமர்ந்து கொண்டு சிறுவன் குவாடன் கண்ணீர் விட்டு அழும் காட்சியை வீடியோவாக சமூக வலைதளத்தில் அவரது தாய் வெளியிட்டிருந்தார்.அதில், அந்த சிறுவன் குவாடன் பேலஸ், "அம்மா எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் . நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தைக் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தனது தாயிடம் தேம்பித் தேம்பி அழுதான்.

நிதியுதவி

குவாடனின் வீடியோவை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச்சிறுவனுக்கு ஆதரவு பெருகியது. 5 கோடி முறைக்கு மேல் இந்த வீடியோ பார்க்கப்பட்டது. சிறுவன் குவாடன் கண்ணீர் விட்டு அழும் வீடியோவைப் பார்த்து ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மான், கூடைப்பந்து வீரர் எனிஸ் கான்டர் ஆகியோர் ஆதரவு அளித்து தனியாக நிதி திரட்டத் தொடங்கினர்.

மரியாதை

சிறுவனுக்கும் அவன் தாயாருக்கும் ஆஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர்
இந்நிலையில், குயின்ஸ்லாந்தில் ஆல்-ஸ்டார் அணிக்கும், நியூஸிலாந்து மாரியோஸ் அணிக்கும் இடையிலான ரக்பி போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திச் செல்லும் மரியாதை சிறுவன் குவாடன் பேலஸுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ் , சிறுவன் குவாடன் பேலஸுக்கு தனியாக GoFundMe எனும் பக்கத்தை உருவாக்கி நிதி திரட்டத் தொடங்கினார். அந்த வகையில் சிறுவன் குவாடன் நிலையைப் பார்த்த ஏராளமானோர் நிதியளித்த வகையில் 4.75 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.3.4 கோடி ) நிதி சேர்ந்தது.

இந்த நிதியை ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ், சிறுவன் குவாடன் பேலஸுக்கு அனுப்பி வைத்தார். சிறுவன் குவாடன் பேலஸ் நீண்ட நாட்களாக அமெரிக்காவின் டிஸ்னி லாண்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதால், அந்தப் பணத்தை அதற்குச் செலவிடுங்கள். அவன் ஆசையை நிறைவேற்றுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

என் மகன் வாழ்க்கை கடினமானது

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் என்ஐடிவிக்கு குவாடன் பேலஸின் தாய் யாரகா பேலஸ் பேட்டி அளித்தார். அப்போது, தனது மகனுக்குக் கிடைத்த பணத்தைத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப் போவதாக அறிவித்தார்.

இதுகுறித்து யாரகா பேலஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "என் மகனைப் போன்ற வாழ்க்கையை யாரேனும் வாழ்ந்திருந்தால், யாரும் டிஸ்னிலேண்டுக்குச் செல்ல விரும்பமாட்டார்கள். அவனின் அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொண்ட சவால்களை விளையாட்டு என எதிர்கொண்டு எங்கும் தப்பித்திருக்க முடியாது. யாரும் அதுபோல் வாழக்கூடாது.

என் மகனுக்கு என்ன நேர்ந்தது என அனைவருக்கும் தெரியும். அவன் கிண்டலுக்கு ஆளானான். நம்முடைய சமூகத்தில் இதுபோன்ற கேலி, கிண்டல்களால் கறுப்பின, வெள்ளை இனத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.

நாங்கள் இந்தப் பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்போகிறோம். அவர்களுக்குத்தான் இந்தப் பணம் தேவைப்படுகிறது. அவர்களுக்குத்தான் இந்தப் பணத்தை எவ்வாறு செலவ வேண்டும் என்பது தெரியும். நாங்கள் டிஸ்னிலேண்டுக்குச் செல்வதைக் காட்டிலும், இந்தப் பணத்தில் சமூகத்தில் உள்ள குழந்தைகள் பயன்பெறுவதுதான் முக்கியமானது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x