ஜப்பான் கப்பலிலிருந்து 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்

ஜப்பான் கப்பலிலிருந்து 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்
Updated on
1 min read

ஜப்பான் கப்பலிலிருந்து சுமார் 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டுப் பயணிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

யோகோகாமா ஜப்பான் துறைமுகத்தில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து சுமார் 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டவர் (இலங்கை, நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள்) இந்தியா வந்தடைந்தனர். இந்தியா வந்தடைந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மானேசர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்கள்.

முன்னதாக, ஹாங்காங் நகரம் வந்தடைந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஜப்பான் சென்றது. இந்தப் பயணிகள் கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வந்ததால், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு இருக்கும் எனும் அச்சத்தால்,14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் ஜப்பான் சுகாதாரத்துறையினர் யோகோகாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இதுவரை 450க்கும் அதிகமான பயணிகளுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in