Published : 25 Feb 2020 06:34 AM
Last Updated : 25 Feb 2020 06:34 AM

ஈரான், தென்கொரியா, இத்தாலியில் வேகமாக பரவும் கோவிட்-19 காய்ச்சல்

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி என உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான்நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிட்-19 காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப் பட்டது. காய்ச்சலின் மையப்புள்ளியான வூஹான் மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

சீனாவில் 2,592 பேர் உயிரிழப்பு

கோவிட்-19 காய்ச்சலால் சீனாவில் நேற்று முன்தினம் 150 பேர் உயிரிழந் தனர். இதன்மூலம் அந்த நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,592 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 409 பேருக்கு காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,150 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்தநாட்டில் இதுவரை 50 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை ஈரான் அரசு உறுதி செய்யவில்லை.

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் நேற்று மேலும் 53 பேருக்கு காய்ச்சல் பரவியுள்ளது. இதன் மூலம்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பான் முழுவதும் காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள னர். கப்பல் பயணிகளையும் சேர்த்து 838 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,100 தேவாலயங்கள் மூடல்

தென்கொரியாவில் கோவிட்-19 காய்ச்சல் வேகமாகப் பரவி வரு கிறது. அந்த நாட்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 833 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவின் ஷின்சியோன்ஜி கிறிஸ்தவ சபையை சேர்ந்த தேவாலயங்கள் மூலமாககாய்ச்சல் பரவுவதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்த அந்த சபையின் 1,100 தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. சபையை சேர்ந்த 2,45,000 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவின் குமி பகுதியில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆலை செயல்படுகிறது. ஆலை ஊழியர் ஒருவருக்கு கோவிட்-19 காய்ச்சல் ஏற்பட்டதால் அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பால் தென்கொரியாவின் மின்னணு, ஆட்டோமொபைல், எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் அச்சம்

ஐரோப்பிய நாடுகளிலும் கோவிட்-19 காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலை ஏற்பட்டு வருகிறது. இந்த காய்ச்சலால் இத்தாலியில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் அந்த நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 152 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலி உடனான ரயில் போக்கு வரத்தை ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் நிறுத்தியுள்ளன. ஆஸ்திரியாவின் 12 நகரங்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி 16, பிரிட்டன் 13, பிரான்ஸ் 12 பேர், ஸ்பெயின் 2, ரஷ்யா 2, பெல்ஜியம், பின்லாந்து, சுவீடனில் தலா ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ரூ.1,792 கோடி நிதி வழங்குகிறது.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x