Last Updated : 23 Feb, 2020 09:20 PM

 

Published : 23 Feb 2020 09:20 PM
Last Updated : 23 Feb 2020 09:20 PM

'பிரதமர் மோடி எனது நண்பர்': இந்தியா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 2 நாட்கள் இந்தியப் பயணத்துக்காக வாஷிங்டனில் இருந்து இன்று புறப்பட்டார்.

பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையே பாதுகாப்பு, நிர்வாக, ராஜாங்க ரீதியில் நட்புறவுகளை மேம்படுத்த இந்தப் பயணம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரும் அதிபர் ட்ரம்ப்புடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா, ட்ரம்ப் மருமகன் ஜார்ட் குஷ்னர், அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் உடன் வருகின்றனர்.

வாஷிங்டனில் இருந்து புறப்படும் முன் அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எனது நண்பர். எனது வருகையை அவர் எதிர்பார்த்திருக்கிறார். இந்தியாவுக்கு வருகிறேன் என்று நீண்ட காலத்துக்கு முன்பே கூறியிருந்தேன். இந்திய மக்களும் என்னை எதிர்பார்க்கிறார்கள். நானும் அவர்களுடன் இருப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன். லட்சக்கணக்கான மக்களுடன் இருக்கப் போகிறேன்.

இது நீண்டகாலப் பயணம். பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. எனது நண்பர் மோடி. அங்கு மிகப்பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதுகுறித்து பிரதமர் மோடியும் என்னிடம் தெரிவித்துள்ளார். அது நிச்சயம் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இந்தியாவுக்குப் புறப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : படம் | ஏஎன்ஐ.

வாஷிங்டனில் இருந்து புறப்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ஜெர்மனியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அங்கு அவரின் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு, அங்கிருந்து மீண்டும் புறப்படுவார்.

அதிபர் ட்ரம்ப்பின் இந்தப் பயணத்தில் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் ஏதும் இருக்காது என்று சொல்லப்படும் சூழலில், இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் எனத் தெரிகிறது.

ஆசிய மண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள், தீவிரவாத ஒழிப்பு, பொருளாதாரப் பிரச்சினைகள், சீனாவின் ராணுவ பலத்தைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களைப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல பிரதமர் மோடியிடம், காஷ்மீர் விவகாரம், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவை குறித்தும் அதிபர் ட்ரம்ப் கேட்பார் என்றும் இந்தியாவில் மதச்சுதந்திரம் பற்றிப் பேசுவார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x