

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் நடந்து 5 மாதங்களுக்கு பிறகு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
ஆப்கனில் 18 ஆண்டுகளாக ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கு இடையேயான போர் நடந்து வருகிறது. இதனை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கான முயற்சியில் பாகிஸ்தானும், தலிபான் பிரதிநிதிகளும் இறங்கி உள்ளனர்.
இந்தநிலையில், ஆப்கனில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தலிபான்களின் அச்சுறுத்தலை மீறியும் 90 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஆப்கானிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி 50.64 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.