Published : 18 Feb 2020 03:37 PM
Last Updated : 18 Feb 2020 03:37 PM

சிரியாவில் வெடிகுண்டு சத்தத்தைக் கேட்டுச் சிரிக்கும் சிறுமி: வைரலான வீடியோ

இது விமானமா? வான்வழித் தாக்குதலா? என்று தந்தை கேட்க, மழலை முகம் மாறாத அச்சிறுமி சிரித்துக்கொண்டே வான்வழித் தாக்குதல் என்று கூறுகிறாள். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இதன் வீடியோ, சிரிய போரினால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள குழந்தைகளின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

சிரியாவின் உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் இட்லிப் நகரில் தந்தை ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள்தான் இவை.

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சாராகுஃப் பகுதியிலிருந்து உள்நாட்டுப் போர் காரணமாக வலுக்கட்டாயமாக முகமத் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் தங்கள் நண்பரின் இல்லம் உள்ள சர்மதா பகுதியில் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் தங்கியிருக்கும் பகுதியின் அருகே அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெடிகுண்டு சத்தங்கள் சகஜம். இந்த வெடிகுண்டு சத்தங்களால் அங்கிருக்கும் குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப்படுவதை முகமத் உணர்ந்துள்ளார்.

இந்த பயம் தனது மகள் செல்வாவுக்கு வரக்கூடாது என்பதற்காக, குண்டுகள் விழுவதை அங்கு யாரோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தனது மகளுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் குண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம் அதனை விளையாட்டுத் துப்பாக்கியிலிருந்து வரும் சத்தம் என்று முகமத் கூற, மகள் செல்வாவும் அது விளையாட்டு என நினைத்து சிரிக்கத் தொடங்கினார்.

இதுகுறித்து முகமத் கூறும்போது, “அவள் குழந்தை. அவளால் போரைப் புரிந்துகொள்ள முடியாது. அவள் இந்தக் குண்டு சத்தத்தைக் கேட்டு பயந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த விளையாட்டை அவளுக்கு அறிமுகம் செய்தேன்” என்றார்.

தற்போது குண்டு மழை சத்தங்களுக்கிடையே செல்வா தனது தந்தையுடன் சிரிக்கும் வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x