21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரம்: சிரியா குறித்து ஐ.நா. கவலை

21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரம்: சிரியா குறித்து ஐ.நா. கவலை
Updated on
1 min read

சிரியாவில் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை:

“சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவில் பள்ளிகள் மற்றும் மருத்துவ உதவிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. குழந்தைகளும் கடும் பனியின் காரணமாக இறக்கின்றனர். உறைபனியில் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள். தொடர்ந்து இட்லிப் மற்றும் அலெப்போ பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. சிரியாவில் நடந்து கொண்டிருப்பது 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்தை அச்சுறுத்தும் மிகப் பெரிய பயங்கரம்’’.

இவ்வாறு ஐ.நா. தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in