Published : 16 Feb 2020 08:20 AM
Last Updated : 16 Feb 2020 08:20 AM
சீனாவில் கோவிட்-19 காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். ஆயிரக்கணக்கானோருக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதன்காரணமாக சீனாவில் கையுறை, முகமூடி, கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ சவாலை சமாளிக்க உலக நாடுகள், பன்னாட்டு அறக்கட்டளைகள் சீனாவுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கையுறை, முகமூடி, கவச உடைகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரு விமானத்தில் சீனாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட வீடியோசமூக வலைதளத்தில் அண்மைக்காலமாக அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 15 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து சீனாவின் குவாங்ஜு நகருக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் அந்த நிவாரண பொருட்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்படவில்லை. ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில்இருந்து அவை அனுப்பப்பட்டுள்ளன. கென்யாவில் அந்த நாட்டு குடியுரிமையுடன் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் வசிக்கின்றனர். மேலும் சீனாவை சேர்ந்த தொழிலதிபர்கள் பலரும் கென்ய தலைநகர் நைரோபியில் தங்கியுள்ளனர். தாய்நாட்டின் மீதான பாசத்தில் அவர்கள் கையுறை, முகமூடி, கவச உடைகள் மற்றும் இதர நிவாரண பொருட்களை வாங்கி `சைனா சதர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் சிறப்பு விமானத்தில் குவாங்ஜு நகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை சீன அரசும் அந்த நாட்டு ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT