Last Updated : 15 Feb, 2020 03:56 PM

 

Published : 15 Feb 2020 03:56 PM
Last Updated : 15 Feb 2020 03:56 PM

நாளுக்கு நாள் எகிறும் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை: சீனத் திருமணங்கள் ஒத்திவைப்பு

சீனாவில் கோவிட்-19 நோய் (கரோனா வைரஸ்) பரவலால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வசந்த காலத்தில் நடைபெறும் திருமணங்களை ஒத்திவைக்கவேண்டிய கட்டாயத்துக்குப் புதுமணத் தம்பதிகள் தள்ளப்பட்டுள்ளனர். திருமண விழாக்களை நடத்தும் தொழிலில் வருவாய் குறைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கோவிட் - 19 நோய்க்கு (கரோனா வைரஸ்) பலியானவர்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 66,492 பேர் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஒட்டுமொத்த மக்களின் கவனமும் முழுவதும் வுஹான் நகரத்தின் குவிந்துள்ளதால் அவர்களது திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனாவுக்குப் புறப்படும் விமானங்களை கடந்த வாரம் இந்தோனேசியா தடை செய்தது.

சீனர்களின் திருமணங்கள் இந்தோனேசியாவின் பாலி, ஜப்பானின் ஒகினாவா மற்றும் மாலத்தீவுகளிலும் நடைபெறுவது உண்டு. இங்குள்ள சீனத் தம்பதிகளின் திருமணத்தை நடத்தி நிர்வகித்த வெளிநாட்டுத் திருமண நிறுவனங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருவதாக தொழில் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பெய்ஜிங்கைச் சேர்ந்த மணமகள் ஷோ என்பவர் குளோபல் டைம்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், "மார்ச் மாதத் தொடக்கத்தில் பாலியில் நடைபெறவிருந்த எங்கள் திருமண விழாவை நாங்கள் ஒத்திவைத்துள்ளோம். உடல்நலக் காரணங்களால் திருமணம் போன்ற நிகழ்ச்சியில் கூட்டம் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்'' என்றார்.

பெய்ஜிங்கில் ஒரு திருமணத் திட்டமிடல் நிறுவனத்தின் ஊழியர் லிசா வாங் கூறுகையில், ''எனது வாடிக்கையாளர்கள் பிப்ரவரி மாதம் பாலியில் ஒரு திருமண விழாவை நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் வைரஸ் தொற்றுநோய் குறித்த கவலைகள் காரணமாக இந்த ஆண்டு இரண்டாம் பாதி வரை இந்தத் திட்டங்களை ஒத்திவைத்துள்ளனர். பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து, எங்கள் நிகழ்ச்சிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பாலி, ஒகினாவா மற்றும் தென் கொரியாவின் ஜெஜு தீவில் ஜனவரி பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி நடுப்பகுதி வரை உள்ளூர் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான புதிய ஒப்பந்தங்கள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை'' என்றார்.

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் உள்ள மற்றொரு ஊழியர் கூறுகையில், "கடந்த ஆண்டுகளில் எங்கள் ஸ்டுடியோவில் திருமணப் புகைப்படங்களுக்காக ஜனவரி மாதத்தில் சீன ஜோடிகளிடமிருந்து 20க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்றோம். ஆனால், இந்த ஆண்டு எங்களுக்கு எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை. சீன வாடிக்கையாளர்களிடமிருந்து ஸ்டுடியோவின் வருவாய் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்தது. ஆனால், அவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைய இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x