

ஈரான் ராணுவத்தைக் குறிவைத்து டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இலக்கை நெருங்குவதற்கு முன்னதாக ஏவுகணைகள் விழுந்துவிட்டன. இந்தத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டது.
பலியானவர்களில் பலரும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் அரசு இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த சில வருடங்களில் ஈரானின் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக சிரியாவில் சில வருடங்களாகத் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுக் கிளர்ச்சியாளர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியாவில் கடந்த சில நாட்களாக சண்டை அதிகரித்து வருகிறது.