Published : 10 Feb 2020 06:19 PM
Last Updated : 10 Feb 2020 06:19 PM

ஹமாஸ் தீவிரவாத முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹமாஸ் தீவிராவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில், “காசாவின் தென் பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

ஆனால், தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் பாலஸ்தீனர்களின் தாக்குதல் எல்லையில் அதிகரித்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.

மேலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் பாலஸ்தீனர்கள் தொடர் போராட்டங்களில் காசா பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x